
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இளம் வீரர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாமல் புதிய அணியின் திறனை சோதிக்கும் பலபரீட்சையாகவே இந்தத் தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டெஸ்ட் அணியில் இருந்து திடீர் ஓய்வுபெற்ற இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மாவை பதவியிலிருந்து நீக்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக நம்பத்தகுந்த தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், மூன்று வடிவங்களுக்கும் வெவ்வேறு கேப்டன்களை வைத்துக் கொள்ளாமல் இருக்கவும், டி20 அணிக்கு சூர்யகுமார் தலைமையிலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியை இளம் வீரர் ஷுப்மன் கில்லிடமும் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபியை வென்றுகொடுத்தவுடன் ஓய்வுபெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் ஓய்வு முடிவு தாமதம், அணித் தேர்வர்களுக்கு புதிய தலைவலியாக உருவாகியுள்ளது. 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னரே அவர் ஓய்வுபெறுவார் என ரசிகர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.
ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவு குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும், ஆனால், அவரின் கேப்டன் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லையென பிசிசிஐயின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இந்திய அணியை வழிநடத்தி வந்தனர். தற்போது சூர்யகுமார் டி20 அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதேநேரத்தில் டெஸ்ட் துணை கேப்டனான ரிஷப் பந்த் மற்றும் கேப்டன் கில் இருவருமே டி20 அணியில் இடம்பிடிப்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணிக்கு 12 ஒருநாள் போட்டிகள் இருக்கின்றன. இந்தப் போட்டிகளில் ரோஹித் சர்மா தலைமை தாங்குவாரா? அல்லது அணியிலிருந்து நீக்கப்படுவரா என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வென்ற பிறகு அவர் கூறும்போது, “ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை. இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. எதிர்காலத்தில் எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே.
நான் இரண்டு வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனால், நான் இன்னும் ஒரு வடிவத்தில் விளையாடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனால், அவர் அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னதாக தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வீரராக தொடருவாரா? அல்லது ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
இதையும் படிக்க: விற்கப்படுகிறதா ஆர்சிபி..? ரூ.16,800 கோடிக்கு கைமாற்ற திட்டமிடும் உரிமையாளர்கள்?!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.