

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 16 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாயில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
மினி ஏலத்துக்கு முன்பாக அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும், வர்த்தக (டிரேடிங்) முறையில் ஈடுபட்டு வீரர்களை வாங்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் விலகிய நிலையில், புதிய தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உதவிப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நியமிக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நிகழாண்டின் (2025) துவக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற டிம் சௌதி, தற்போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் உள்ளார்.
36 வயதான டிம் சௌதி 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் கொல்கத்தா அணியில் விளையாடியுள்ளார்.
அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளையும் சேர்த்து 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள சௌதி, 2019 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும் இரண்டாம் பிடித்ததிலும், 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் விளையாடி வெற்றி பெற்றதில் பெரும் பங்காற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.