

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்க கேஜிஎஃப், காந்தாரா படங்களைத் தயாரித்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் முனைப்புக் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதல்முறை கோப்பையை வென்ற உற்சாகத்தில் கர்நாடக விதான் சௌதாவிலிருந்து பெங்களூரு சின்னசாமி திடல் வரை வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஒன்றுமறியாத அப்பாவி மக்கள் 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஆர்சிபி அணியின் உரிமையை வேறொருவருக்கு அணி உரிமையாளர்கள் விற்க விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகின. அணி உரிமையின் மதிப்பீடு விவரம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.17,000 கோடி) வரை விலை கேட்கக்கூடும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
டியாஜியோ மூலம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தால் வழிநடத்தப்பட்டு வரும் ஆர்சிபி அணி, யுனைடெட் ஸ்பிரிட்ஸின் தலைமை நிறுவனமான டியாஜியோ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் பகுதி அல்லது முழு பங்குகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட போது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் உரிமையாளராகவும், இந்தியாவின் மதுபானத் துறையில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராகவும் இருந்த விஜய் மல்லையாவால் ஆர்சிபி அணி முதலில் வாங்கப்பட்டது.
விஜய் மல்லையா கடனில் சிக்கிக் கொண்டதால், டியாஜியோவிற்கு, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மூலம் ஆர்சிபியை வாங்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆர்சிபி அணியைக் கைமாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், சிறிய பட்ஜெட்டில் பெரிய படங்களை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும், கேஜிஎஃப், காந்தாரா போன்ற படங்ளைத் தயாரித்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் ஆர்சிபி அணியை வாங்க முனைப்புக் காட்டுவதாகவும் தகவல்கள் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
அந்தத் தகவலை உறுதிப்படுத்தாது என்றாலும்கூட, 2023 ஆம் ஆண்டிலிருந்தே ஆர்சிபி அணியின் டிஜிட்டல் பார்டனராகவும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இருக்கிறது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஹொம்பாலே ஃபிலிம்ஸ், 2012 ஆம் ஆண்டு விஜய் கிரகந்தூர் மற்றும் சல்வே கௌடாவால் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பான் இந்தியா படங்களை தயாரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.