
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தத் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி பெர்த்தில் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி துவங்குகிறது. ஒருநாள் போட்டிகள் பெர்த், அடிலெய்டு, சிட்னியிலும், டி20 போட்டிகள் கேன்பெரா, மெல்பர்ன், ஹூபர்ட், கோல்ட் ஹாஸ்ட், பிரிஸ்பேன் ஆகிய திடல்களிலும் நடைபெறுகிறது.
நீண்ட நாள்களுக்குப் பின்னர், இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கவுள்ளதாலும், இந்திய அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பரம எதிரிகள் இல்லையென்றாலும், உலகக் கோப்பையின் முக்கியப் போட்டிகளில் இந்திய அணியை பல்வேறு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்துள்ளதால் இரண்டு அணி ரசிகர்களும் பாம்பு - கீரியுமாக சமூக வலைதளங்களில் அடித்துக் கொள்வதும் உண்டு.
இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், 1 லட்சம் இருக்கைகள் கொண்ட மெல்பர்ன் திடலில் அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெறும் 2-வது டி20 போட்டிக்கான 95,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இந்த டி20 தொடர் துவங்குவதற்கு இன்னும் 13 நாள்கள் உள்ளன. அதுமட்டுமின்றி விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் டி20 போட்டிகளில் விளையாட பட்சத்திலும் டிக்கெட் விற்பனை களைகட்டியுள்ளது. டி20 தொடருக்கு மட்டும் மொத்தமாக 1,75,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக மெல்பர்ன் கிரிக்கெட் திடல் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.