
எந்த ஒரு அணியாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்று நிறைவடைந்து அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகின்றன. சூப்பர் 4 சுற்றின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடவுள்ளன. நாளை நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை வங்கதேசம் எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், இந்திய அணி கடந்த நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது பெரிய விஷயமில்லை எனவும், எந்த ஒரு அணியாலும் இந்தியாவை வீழ்த்த முடியும் எனவும் வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எந்த ஒரு அணிக்கும் இந்திய அணியை வீழ்த்தக் கூடிய திறன் இருக்கிறது. போட்டி நாளில் என்ன நடக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம். இந்திய அணி கடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது என்பதெல்லாம் முக்கியமல்ல. போட்டி நடைபெறும் மூன்றரை மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் முக்கியம். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்த முயற்சிப்போம்.
உலகின் சிறந்த டி20 அணியான இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றால், எப்போதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு இருக்கும். இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிரான போட்டியை நாங்கள் உற்சாகமாக விளையாடவுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.