
இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் இணைந்ததை வரவேற்று சிட்னி தண்டர் அணி விடியோ வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிகவும் பிரபலமான பிக்-பாஸ் தொடரில் விளையாடுவதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சமீபத்தில், டெஸ்ட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடவுள்ளதாக விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவர் பிக்பாஸ் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் விளையாடும் இந்தியாவின் முதல் கேப்டு வீரர்(இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்) என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மகளிருக்கான பிக்-பாஸ் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை பலரும் விளையாடியிருந்தாலும், இந்திய வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும்போது மற்ற லீக்குகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக விளையாடிவந்த அஸ்வின் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதால், இனி உலகளவில் நடைபெறும் போட்டியில் விளையாட எந்தவித தடையும் இல்லை. அவர் அனைத்துவித லீக் போட்டிகளிலும் விளையாட முடியும்.
முன்னதாக, இந்தியாவின் உன்முக் சந்த், உள்ளூர் போட்டிகளில் விளையாடிய நிகில் சௌத்ரி உள்ளிட்டோர் பிபிஎல் தொடரில் விளையாடியிருந்தாலும், உன்முக் சந்த் அமெரிக்க வீரராகவும், நிகில் சௌத்ரி ஆஸ்திரேலியாவின் உள்ளூர் வீரராகவுமே ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
பிபிஎல் தொடரைத் தொடர்ந்து ஐஎல்டி20 தொடரிலும் அஸ்வின் விளையாட முடிவு செய்துள்ளார். அவர் அதிகபட்ச அடிப்படை தொகையில் அவரது பெயரை பதிவு செய்துள்ளார்.
பிபிஎல் தொடர் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐஎல்டி20க்கான போட்டிகள் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் என்பதால், பிபிஎல்லின் முதல் மூன்று வாரங்கள் அஸ்வின் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.