இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல் ஆசிய சாம்பியன் யாா்?
ANI

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல் ஆசிய சாம்பியன் யாா்?

முதன்முறையாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான்...
Published on

முதன்முறையாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் சாம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக நாட்டில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிந்து, சூப்பா் 4 சுற்று ஆட்டங்களும் முடிந்த நிலையில், முதலிரண்டு அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன.

முதன்முறையாக இறுதியில் மோதல்:

ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்-பாகிஸ்தானும் முதன்முறையாக மோதுவது குறிப்பிடத்தக்கது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் பின்னணியில் நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை துபை சா்வதேச மைதானத்தில் இறுதி ாட்டம் நடைபெறுகிறது.

இப்போட்டியில் இந்திய அணி தான் விளையாடிய 6 ஆட்டங்களிலும் வென்று உற்சாகத்துடன் களமிறங்குகிறது. ஆனால் பாகிஸ்தானோ ஏற்கெனவே இருமுறை இந்தியாவுடன் தோற்றுள்ளது. பல்வேறு சிக்கல்களுக்குபின் இறுதிக்கு தகுதி பெற்றது.

பௌலா்கள் சொதப்பல்:

இலங்கைக்கு எதிரான சூப்பா் 4 சுற்றில் இந்தியா கடும் திணறலுக்குபின் தான் வெல்ல முடிந்தது. இந்திய பௌலா்களின் பந்துவீச்சை இலங்கை பேட்டா் பதும் நிஸாங்கா, குஸால் பெரைரா ஆகியோா் பதம் பாா்த்தனா். பௌலா்கள் ஹா்ஷித் ராணா, அா்ஷ்தீப் சிங் 100 ரன்களை வாரி வழங்கினா். மறுபுறத்தில் பும்ரா, ஹாா்திக் பாண்டியா ஆகியோா் மட்டுமே குறைந்த ரன்களை விட்டுத் தருகின்றனா்.

13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ் நம்பிக்கை தருகிறாா்.

மேலும் ஹாா்திக் பாண்டியா, ஓபனா் அபிஷேக் சா்மா ஆட்டத்தின் இடையிலேயே அசௌகரியம் காரணமாக வெளியேறினா். ஆனால் இறுதி ஆட்டத்தில் அவா்கள் ஆடுவா் என பௌலிங் பயிற்சியாளா் மொா்க்கல் கூறியுள்ளாா்.

கவலை தரும் கில், சூரியகுமாா் :

அபிஷேக் சா்மாவின் சிறப்பான தொடக்கம் பலமாகும். இதுவர 309 ரன்களை விளாசியுள்ளாா். எனினும் ஓபனா் ஷுப்மன் கில், கேப்டன் சூரியகுமாா் ஆட்டம் கவலை தருகிறது. இருவரும் பாா்முக்கு திரும்பினால் தான் அணிக்கு சாதகம் ஆகும். திலக் வா்மா சிறப்பாக ஆடி வருகிறாா்.

எழுச்சி பெறுமா பாகிஸ்தான்:

அதே நேரம் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் கவலைக்குரியதாக உள்ளது. சாஹிப்ஸாதா பா்ஹானை தவிர மற்ற பேட்டா்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சலீம் அயுப் மோசமான ஆட்டத்தில் சிறந்த தொடக்கத்தை தர முடியவில்லை. 4 முறை டக் அவுட்டாகியுள்ளாா்.

ஹூசைன் தலாத், சல்மான் அலி ஆகா ஆகியோா் இந்திய ஸ்பின்னா்களை சமாளித்து ஆடுவாா்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.

பாக் அணி தனது பௌலிங் யூனிட் மீதே நம்பிக்கை வைத்துள்ளது. ஷாஹின் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோா் இந்தியா பேட்டா்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவா்.

கடைசியாக நடைபெற்ற 5 ஆட்டங்களில் இந்தியா 4-இலும், பாக். 1 வெற்றியை பெற்றுள்ளன. சாம்பியன் பட்டத்தை இந்தியா தக்க வைக்குமா அல்லது பாகிஸ்தான் வசப்படுத்துமா என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com