

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால், பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிந்து எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் விளையாடாது என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வங்கதேசத்தை விளையாட வைக்க ஐசிசி முயற்சித்தும், இந்தியாவில் விளையாட முடியாது என திட்டவட்டமாக வங்கதேசம் மறுத்ததால் வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முஸ்தஃபிசூர் ரஹ்மான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாட முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 11-வது சீசன் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. அதில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக முஸ்தஃபிசூர் ரஹ்மான் விளையாடவுள்ளார். இந்திய மதிப்பில் அவர் சுமார் ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடியுள்ள முஸ்தஃபிசூர், மீண்டும் அந்த அணிக்காக விளையாடவுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட வங்கதேச அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.