சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஆடுகளம் மந்தமாக இருந்ததால், துரிதமாக ரன் சேர்ப்பதில் சிரமம் இருந்தது. இதனால், பஞ்சாப்புக்கு இந்த முறை சிறப்பான தொடக்கம் அமையவில்லை.
21 ரன்கள் எடுத்த கேப்டன் கேஎல் ராகுல் ஜேசன் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, சீரான இடைவேளையில் அவ்வப்போது விக்கெட்டுகள் விழுந்தன.
ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கத்தில் பெரிய ஷாட் ஆட முயற்சித்து ஒவ்வொரு பேட்ஸ்மேனும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக எய்டன் மார்கிரம் 27 ரன்கள் எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
ஹைதராபாத் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான், அப்துல் சமத் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.