மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரின் முடிவால் விரக்தியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஓய்வறைக்கு கோபத்தில் சென்ற விடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல்-இன் நேற்றைய (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. முதல் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | சென்னை மீண்டும் தோல்வி: ஹைதராபாத்துக்கு முதல் வெற்றி
இதில், பெங்களூரு வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், விராட் கோலி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார். பந்தை இளம் டெவால்ட் பிரேவிஸிடம் கொடுத்தார் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா. முதல் பந்திலேயே கோலியை எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் பிரேவிஸ்.
ஆனால், கோலி ரிவியு கேட்க களநடுவரின் முடிவே சரி என மூன்றாவது நடுவரும் அறிவித்ததால், 48 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார்.
இந்த முடிவால் விரக்தியடைந்த கோலி, களத்திலிருந்து மிகுந்த கோபத்தில் வெளியேறினார். இந்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.