ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் புதிய கேப்டன் ஜடேஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அடுத்ததாக ஆர்சிபியுடன் நாளை விளையாடுகிறது சிஎஸ்கே அணி. ஜடேஜா பற்றி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது:
ஜடேஜாவை கேப்டனாக்கியது பெரிய மாற்றம். நீண்ட காலமாக கேப்டனாக இருந்த தோனி அற்புதமான வெற்றிகளைப் பெற்றுள்ளார். ஜடேஜா கேப்டனாகியுள்ள முதல் வருடத்தில் தோனி உடன் இருந்து அவருக்கு உதவி செய்து வருகிறார். ஜடேஜாவும் தோனியும் தினமும் அணியின் திட்டங்கள் பற்றி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்குடன் இணைந்து விவாதிப்பதை நான் அறிவேன்.
அணியில் அனைவரும் ஜடேஜாவுக்கு உரிய மரியாதையை அளிக்கிறார்கள். அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என ஜடேஜா விரும்புகிறாரோ அதன்படி நடந்துகொள்கிறோம். அணிக்குச் சில வெற்றிகள் கிடைத்தால் ஜடேஜாவால் ஒரு கேப்டனாக இயல்புடன் இருக்க முடியும். அனைவரும் ஜடேஜாவுக்கு ஆதரவளிக்கிறோம். விரைவில் சில வெற்றிகள் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.