பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் தேர்வானதற்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில் 115 ரன்களுக்குச் சுருண்டது. ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் எடுத்தார். கலீல் அஹமது, லலித் யாதவ், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தில்லி அணி, 10.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 60 ரன்களும் பிருத்வி ஷா 41 ரன்களும் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் தேர்வானார்.
இந்நிலையில் ஆட்ட நாயகனாக அக்ஷர் படேலைத் தேர்வு செய்யாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா என இரு முக்கிய பேட்டர்களின் விக்கெட்டுகளை அக்ஷர் படேல் வீழ்த்தினார். குல்தீப் யாதவோ ரபடா, எல்லீஸ் என இரு பின்நடுவரிசை வீரர்களின் விக்கெட்டுகளையே வீழ்த்தினார். இதனால் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய அக்ஷர் படேலை ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யாதது ஏன் என ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற குல்தீப் யாதவும் இதை உணர்ந்ததால் பரிசளிப்பு விழாவில் இவ்வாறு பேசினார். நன்றி. ஆனால் ஆட்ட நாயகன் விருதை அக்ஷர் படேலுடன் பகிர்ந்தளித்திருக்க வேண்டும். ஏனெனில் நடு ஓவர்களில் முக்கியமான விக்கெட்டுகளை அவர் எடுத்தார் என்றார்.