நடப்பு ஐபிஎல் தொடரில் பலர் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் மூன்று சதங்களை விளாசியுள்ளார். கே.எல். ராகுலும் சிறப்பாக பேட்டிங் ஆடியுள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை, குல்தீப் யாதவும் சஹலும் கலக்கிவருகின்றனர்.
இந்நிலையில், வளர்ந்துவரும் இளம் வீரர்தான் இந்த தொடரின் முகமாக உள்ளார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகபந்து வீச்சாளரான உம்ரான் மாலிக், நிலையாக 150 கி.மீ வேகத்திற்கு பந்து வீச வருகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவரை கங்குலி வெகுவாக பாராட்டியுள்ளார்.
மாலிக் குறித்து கங்குலி பேசுகையில், "இது மிகவும் சுவாரஸ்யமானது. நான் ஐபிஎல் போட்டிகளை பார்த்துவருகிறேன். எந்த அணியும் வெற்றி பெறலாம். அனைவரும் நன்றாக விளையாடுகிறார்கள். இரண்டு புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் சிறப்பாக ஆடிவருகின்றன.
இதையும் படிக்க | வாழ்த்து மழையில் ரோஹித் சர்மா: விருப்பங்கள் சாத்தியமாகட்டும்!...
உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. உமேஷ் யாதவ், கலீல் அகமதும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில், உம்ரான் மாலிக்தான் தொடரின் முகமாக இருந்துவருகிறார் என்று கூறுவேன்" என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், உம்ரான் மாலிக் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்களை விட்டு கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த போட்டியில், குஜராத் அணி வெற்றிபெற்றபோதிலும், ஆட்ட நாயகன் விருது உம்ரானுக்கே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.