ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50வது ஆட்டம் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர், பாவெல் அதிரடி காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக், கேன் வில்லியம்சன் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வந்த திரிபாதி, மார்க்கரன் ஓரளவுக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிக்கோலஸ் பூரன் நம்பிக்கையளிக்கும் விதமாக அரைசதம் கடந்தார்.
எனினும் டெல்லி அணியின் அபார பந்துவீச்சால் ஹைதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
முடிவில் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 5வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.