ஐபிஎல் கிரிக்கெட்டில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் தான் சரியாக நடத்தப்படவில்லை என்றும் டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அதிரடி சிக்ஸர் நாயகன் கிறிஸ் கெயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகளுக்காக விளையாடினார். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2019-இல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் 6-வது இடம் பிடித்தபோதும் 2020-இல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடும் அணியில் அவருக்கு இடம் கிடைப்பது சிரமமாக இருந்தது.
2020 ஐபிஎல் போட்டியில் 7 ஆட்டங்களில் 288 ரன்கள் எடுத்தார். 2021-இல் 10 ஆட்டங்களில் விளையாடி 193 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 125.32.
இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கொல்கத்தா ‘ஆல்-அவுட்’: லக்னெள அபார வெற்றி
இதுபற்றி அவர் கூறியதாவது:
"கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் சென்ற விதத்தைப் பார்க்கும்போது நான் சரியாக நடத்தப்படவில்லை என்று நினைக்கிறேன். இந்த விளையாட்டுக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் நிறைய பங்களிப்பை அளித்தபோதும் உரிய மரியாதை கிடைக்கவில்லை. எனவே, சரி இருக்கட்டும் என ஐபிஎல் கிரிக்கெட்டில் நுழையாமல் இருப்பது பற்றி கவலை கொள்ளாமல் அதை அப்படியே விட்டுவிட்டேன்.
கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்டு எப்போதுமே ஒரு வாழ்க்கை இருக்கும். யதார்த்தத்துடன் ஒத்துப்போக முயற்சிக்கிறேன்.
நான் அடுத்தாண்டு வருகிறேன். அவர்களுக்கு நான் தேவை. ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா, ஆர்சிபி மற்றும் பஞ்சாப் என 3 அணிகளுக்காக விளையாடியுள்ளேன். இதில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஏதேனும் ஒரு அணிக்கு கோப்பை வென்று தர விரும்புகிறேன்" என்றார்.
142 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில், 4,965 ரன்களை குவித்துள்ளார்.