அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளையாடுவாரா?: முன்னாள் வீரர் சந்தேகம்

இதேபோல 2021-ல் சுரேஷ் ரைனாவுக்கு ஏற்பட்டது. சில ஆட்டங்களுக்குப் பிறகு அவரை நீக்கினார்கள்...
அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளையாடுவாரா?: முன்னாள் வீரர் சந்தேகம்

அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளையாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போகலாம் எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. 

ஐபிஎல் 2022 போட்டி தொடங்குவதற்கு முன்பு சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகினார். இதையடுத்து ஜடேஜா, சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றதால் திடீரென கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். இந்த நெருக்கடியில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி மீண்டும் தேர்வானார். அதற்குப் பிறகு சிஎஸ்கே விளையாடிய 3 ஆட்டங்களில் 2-ல் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது ஜடேஜாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் தில்லிக்கு எதிராக சிஎஸ்கேவின் சமீபத்திய ஆட்டத்தில் காயம் காரணமாக ஜடேஜா விளையாடவில்லை. இந்நிலையில் காயம் குணமாகாததால் ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து ஜடேஜா விலகியுள்ளார். சிஎஸ்கே அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே பிளேஆஃப்புக்கான போட்டியில் இருக்க முடியும் என்கிற நிலையில் ஜடேஜாவுக்கு ஏற்பட்டுள்ள காயமும் அதனால் அவர் போட்டியிலிருந்து விலகியிருப்பதும் சிஎஸ்கே அணிக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. கரோனா தடுப்பு வளையத்திலிருந்து வெளியேறி தனது வீட்டுக்குச் சென்றுள்ளார் ஜடேஜா. 

இந்நிலையில் சிஎஸ்கே அணியைத் தொடர்ந்து வழிநடத்த தயாராக இருந்தும் தனக்கு ஆதரவாக இல்லாத காரணத்தால் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் மீது ஜடேஜா அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளையாடுவது சந்தேகம் என்றும் பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனால் இத்தகவலை சிஎஸ்கே அணியின் காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார். சிஎஸ்கேவின் வருங்காலத் திட்டங்களில் ஜடேஜா நிச்சயம் உள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படியே அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் என்று ஓர் ஆங்கில ஊடகத்துக்கு அவர் பேட்டியளித்துள்ளார். 

இந்நிலையில் அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளையாடாமல் போக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சந்தேகம் தெரிவித்துள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:

ஜடேஜா இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார். ஆனால் ஒருவேளை அடுத்த வருடமும் சிஎஸ்கேவுக்காக விளையாட மாட்டார் என நினைக்கத் தோன்றுகிறது. இது சிஎஸ்கே அணியில் நடைபெறுகிறது. ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டோலோ அணியிலிருந்து நீக்கப்பட்டாலோ என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியாது. இதேபோல 2021-ல் சுரேஷ் ரைனாவுக்கு ஏற்பட்டது. சில ஆட்டங்களுக்குப் பிறகு அவரை நீக்கினார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com