ரவீந்திர ஜடேஜா இடத்தை நிரப்புவது கடினமானது என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளார். எனினும், கேப்டன் விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் மனக் கசப்பு ஏற்பட்டதால், பாதுகாப்பு வளையத்திலிருந்து அவர் முன்கூட்டியே வெளியேறிவிட்டதாகவும், அடுத்த சீசனில் சென்னை அணிக்காக அவர் விளையாடுவது சந்தேகம் என்ற வகையில் தகவல்கள் கசிந்தன.
இதையும் படிக்க | சிஎஸ்கேவை விட்டுப் பிரிகிறாரா ஜடேஜா?: காசி விஸ்வநாதன் பதில்
இவற்றுக்கு மறுப்பு தெரிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், எதிர்காலத் திட்டங்களில் ஜடேஜா இருப்பதாக விளக்கமளித்தார்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி இன்று (வியாழக்கிழமை) களமிறங்கியது. டாஸ் போடும் நேரத்தில் ஜடேஜா பற்றி தோனி பேசுகையில், "நிறைய கூட்டணிகளை முயற்சிக்க ஜடேஜா உதவுவார். அவரது இடத்தை நிரப்புவது கடினமானது. அவரைவிட எவராலும் சிறப்பாக பீல்டிங் செய்ய முடியாது என நினைக்கிறேன். அந்த விஷயத்தில் அவருக்கு மாற்றே கிடையாது" என்றார்.