ஆணவம் இருக்கக்கூடாது: ‘ஆட்ட நாயகன்’ பும்ரா சொல்லும் ரகசியம்!
ஒவ்வொரு ஆடுகளத்திலும் வித்தியாசமாக பந்து வீச வேண்டும் என பும்ரா கூறியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பும்ரா 4 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் 21 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
விருது பெற்ற பிறகு பும்ரா பேசியதாவது:
சிறப்பாக பந்து வீசியது மகிழ்ச்சி. ஆனால் எப்போதும் 5 விகெட்டுகள் எடுக்க வேண்டுமென நினைப்பதில்லை. முதல் 10 ஓவர்களில் ஆடுகளம் வழுக்கிச் சென்றது. நான் அதை உபயோகித்து கொண்டேன். இந்த டி20 போட்டிகளில் பௌலர்களின் நிலைமை மோசம். கருணையே இருக்காது. அதனால் நாம் பல திறமைகளை வைத்துக்கொள்ள வேண்டும். ஒரே மாதிரி பந்துவீசக் கூடாது. சில நேரங்களில் 145 கி.மீ/ மணி வேகத்தில் பந்து வீசக்கூடாது. ஏனெனில் ஆடுகளம் அதற்கு ஏற்ப இருக்காது. மெதுவான பந்துகள், பௌன்சர்கள் என மாற்றி மாற்றி வீச வேண்டும்.
பயிற்சியில் அழுத்தமான சூழ்நிலைகளை நாமே உருவாக்கி பயிற்சி செய்ய வேண்டும். பின்னர் ஆட்டத்தின்போது அந்த பயிற்சி உதவும். இந்தக் காலத்தில் அனைவரும் தரவுகள் வைத்துள்ளார்கள். அதனால் நாம் தினமும் பயிற்சி செய்ய வேண்டும்.
ஆட்டம் எதை நோக்கி செல்கிறதென புரிந்துக் கொள்ள் வேண்டும். இதில் ஈகோ (ஆணவம்) இருக்கக் கூடாது. ஒரே நாளில் எல்லா திறமைகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை. தேவையான போது பயன்படுத்தினால் போதும் என்றார்.