சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் வழியை ஆர்சிபி மற்ற அணிகளுக்கு காட்டியுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வந்த சன் ரைசர்ஸின் வெற்றிப் பயணத்துக்கு ஆர்சிபி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் வழியை ஆர்சிபி மற்ற அணிகளுக்கு காட்டியுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: சன் ரைசர்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிய விதம், அந்த அணியை மற்ற அணிகள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எனக் காட்டியதாக நினைக்கிறேன். சன் ரைசர்ஸ் தனது அடுத்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டிகளில் ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு ஏற்றவாறு இருந்தது. அதனால் சென்னைக்கு எதிரான ஆட்டம் சுவராசியமானதாக இருக்கப் போகிறது என்றார்.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 3-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.