இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நாளை (மார்ச்.22) தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஐபிஎல் மினி ஏலம் துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அண்மையில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்தது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்துவார் என அணி நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது.
ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பாட் கம்மின்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பெரிய மாற்றத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடியோவினை வெளியிட்டுள்ளது. அதில் கம்மின்ஸ் கூறியதாவது:
சில திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, தொடக்கம் அதிரடியாக இருக்க வேண்டும். வீரர்களுடன் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. வீரர்களைப் புரிந்துகொள்ள அவர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். பயிற்சியாளர்களுடன் உரையாடி வருகிறேன். அணி வீரராக என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை பேசினோம்.
எங்கள் அணி இளம், அனுபவம் என நல்ல கலவையாக இருக்கிறது. அனுபவம் வாய்ந்த புவனேஷ் இருக்கிறார். கடைசியாக கேப்டனாக இருந்த மார்கரம் இருக்கிறார். திறமையான இளம் வீரர்களும் இருக்கிறார்கள். அபிஷேக், உம்ரான் மாலிக் போன்ற வீரர்களை பார்க்கும்போது ஆர்வமாக இருக்கிறது. ரசிகர்களும் போட்டிகளுக்கு முன்பாகவே உற்சாகமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.