
தங்கள் அணி மிகவும் எளிமையான அணி எனவும், தங்களது யுக்திகளும் எளிமையானவை எனவும் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மிகவும் எளிமையான அணி
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், நாங்கள் மிகவும் எளிமையான அணி எனவும், எங்களது யுக்திகள் மிகவும் எளிமையானவை எனவும் அந்த அணி வீரர் ஷாருக்கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் எளிமையான யுக்திகளுடன் மிகவும் எளிமையான அணியாக இருப்பதாக நினைக்கிறேன். இதுவரை நடந்து முடிந்த போட்டிகளை வைத்துப் பார்க்கும்போது, அனைத்து அணிகளும் வலிமையாக இருக்கின்றன. நாம் எப்படி விளையாடுகிறோம் என்பதே மிகவும் முக்கியம். இதுவரையிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். லக்னௌவுக்கு எதிரான போட்டியிலும் அதே ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.
குஜராத் டைட்டன்ஸ் - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை (ஏப்ரல் 12) லக்னௌவில் நடைபெறவுள்ளது.