
சிஎஸ்கே அணியில் அதிகமாக மாற்றங்கள் செய்தது ஏன் எனபது குறித்து அதன் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியது கவனம் ஈர்த்துள்ளது.
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை நேற்றிரவு (மே.7) வீழ்த்தியது.
காயம் காரணமாக ருதுராஜ் விலக தோனி கேப்டன் ஆனார். இருப்பினும், சிஎஸ்கே அணியின் தோல்வியைத் தவிர்க்க இயலவில்லை.
தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டரில் சொதப்பிய சிஎஸ்கே அணியை முற்றிலுமாக தோனி மாற்றியமைத்துள்ளார்.
காயம் காரணமாக விலகிய வீரர்களுக்குப் பதிலாக அதிரடியான இளம் வீரர்களை தோனி தலைமையில் சிஎஸ்கே நிர்வாகம் நியமித்துள்ளது.
நேற்றைய போட்டியில் அறிமுகமான உர்வில் படேல் 11 பந்துகளில் 31 ரன்களும் டெவால்டு பிரீவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.
எதார்த்தமாக இருக்க வேண்டும்
இது குறித்து தோனி பேசியதாவது:
இந்த சீசனில் அதிகமாக வெற்றிபெறவில்லை. இப்போதுதான் 3 போட்டிகளை வென்றுள்ளோம் (சிரிக்கிறார்). சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக செல்லவில்லை. அதைப் பற்றிப் பேசினால் உணர்ச்சிகள் எழலாம்.
அணியின் பெருமிதம் என்ற விஷயமும் இருக்கிறது. ஆனால், நாம் எதார்த்தமாக இருக்க வேண்டும். 25 வீரர்களில் யார்யார் எங்கு பொருந்துவார்கள் என்பதை கண்டறிவதில் கவனமாக இருக்கிறோம்.
திறமையைவிட மனவலிமை முக்கியம்
போட்டியிடவும் வேண்டும், அதேசமயம் சில கேள்விக்கு பதிலும் கண்டறிய வேண்டும். பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் எங்கு பயன்படுத்த வேண்டும், எந்தச் சூழலில் யார் பொருத்தமானவர்கள் என அறிய வேண்டும்.
முதலில் யாருமே சரியாக விளையாடவில்லை. தொடரிலிருந்தும் வெளியேறிவிட்டோம். அதனால், மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.
இதில் முக்கியமாக நாங்கள் ஒருவரது மனவலிமையை சோதிக்கிறோம். தொழில்நுட்ப ரீதியாக திறமை வாய்ந்தவர்கள் எப்போதும் ரன்களை குவிப்பதில்லை. மனவலிமை முக்கியம்.
போட்டி குறித்தான விழிப்புணர்வும் முக்கியம். இவைகள் இருந்தாலே ஒருவர் தொடர்ச்சியாக நன்றாக விளையாட முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.