
ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா தனக்குக் கிடைத்த அதிர்ஷடத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பேட்டியில் கூறியுள்ளார்.
’எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை நேற்றிரவு வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் சர்மாவுக்கு 2 கேட்ச்சுகளை குஜராத் அணியினர் தவறவிட்டனர்.
அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு விளையாடிய ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அசத்தினார். அதற்காக, ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
போட்டிக்குப் பிறகு விருது வென்ற ரோஹித் சர்மா பேசியதாவது:
அதிர்ஷடத்தை பயன்படுத்திக் கொண்டேன்
நான் இந்த சீசனில் 4 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளேன். இன்னும் கூடுதல் அரைசதங்களை அடிக்க விரும்புகிறேன். அணியாக எங்களுக்கு நல்ல நாள்.
எலிமினேட்டரில் விளையாடுவதன் முக்கியத்துவம் எனக்குப் புரியும். அணியாக நன்றாக விளையாடியது பெருமையாக இருக்கிறது.
போட்டியில் விளையாடும்போது, எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து விட்டு அணிக்காக அனைத்தையும் செய்வேன். எனக்கு கிடைத்த அதிர்ஷடத்தை முழுவதுமாக பயன்படுத்தி அணியை நல்ல இடத்திற்குக் கொண்டு சென்றேன்.
ஐபிஎல் தொடருக்கு முன்பு அதிர்ஷ்டமில்லை
ஈரப்பதம் வந்தபோது பந்துவீச்சாளர்களுக்கு கடினமாக இருந்தது. எங்களது அணியினர் அதைச் சிறப்பாக கையாண்டார்கள்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஐபிஎல் தொடருக்கு முன்பாக நான் அடித்த ஷாட்டுகள் எல்லாமே ஃபீல்டர்களிடம் சென்றன. எப்படி இருந்தாலும் நமக்கு அதிர்ஷ்டம் தேவை. அது எனக்கு இந்நாளாக இருந்தது.
அதிரடியான கணத்தை தொடருவதிலேயே நான் கவனம் செலுத்தினேன். ஜானி பெயர்ஸ்டோவை நீண்ட நாள்களாகவே தெரியும். முதல் போட்டியில் ஆடுவதுபோல் விளையாடவில்லை. நல்ல தொடக்கம் கிடைத்ததும் அதைப் பயன்படுத்திக் கொண்டோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.