ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியை ஐபிஎல் ஏலத்தில் 8.40 கோடிக்குத் தேர்வு செய்தது அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி முதல் ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் 3 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்தார் சுனில் நரைன்.
அதன்பிறகு வீசிய இரண்டு ஓவர்களிலும் ரன்களைக் கட்டுப்படுத்தியதோடு அபாரமாக விளையாடி வந்த நிதிஷ் ராணாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார் வருண். கடைசியில் அவர் 3 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 35 ரன்கள் கொடுத்திருந்தார்.
எனினும் முதல் ஓவரில் 25 ரன்களைக் கொடுத்த வருண், ஒரு விநோதமான சாதனையைச் செய்துள்ளார். ஐபிஎல் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரில் அதிக ரன்களைக் கொடுத்த வீரர் என்கிற நிலைமைக்கு ஆளாகியுள்ளார் வருண்.
ஐபிஎல்: முதல் ஓவரில் அதிக ரன்கள்
வருண் சக்கரவர்த்தி, 2019 - 25 ரன்கள்
கேம்ரூன் ஒயிட், 2008 - 24 ரன்கள்
இஷான் மல்ஹோத்ரா, 2011 - 23 ரன்கள்
ஆஷ்லே நோஃப்கே, 2008 - 22 ரன்கள்
இஷ்வர் பாண்டே, 2013 - 21 ரன்கள்