

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த சீசனில் மோசமான ஃபார்மில் உள்ள வாட்சன் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு டு பிளெசிஸ், ரெய்னா ஜோடி பஞ்சாப் பந்துவீச்சை பதம் பார்த்தது. அவ்வப்போது பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து ரன் ரேட்டையும் கட்டுக்குள் வைத்து விளையாடினர்.
டு பிளெசிஸ் தனது 37-வது பந்தில் முதலில் அரைசதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து, முருகன் அஸ்வின் ஓவரில் பவுண்டரி அடித்த ரெய்னா தனது 34-வது பந்தில் அரைசதம் அடித்தார். இந்த பாட்னர்ஷிப் 100 ரன்களை கடந்து சென்றது. அரைசதம் அடித்த பிறகு டு பிளெசிஸ் டாப் கியருக்கு மாறி ரன் குவிக்க தொடங்கினார். இதனால் சென்னை அணியின் ரன் ரேட் ஓவருக்கு 8-ஐ கடந்து சென்றது.
இந்த நிலையில் 53 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, தோனி களமிறங்கினார்.
சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்து மிரட்டி வந்த டு பிளெசிஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 96 ரன்கள் எடுத்திருந்த போது சாம் கரனின் அற்புதமான யார்க்கரில் போல்டானார். அவர் 55 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 96 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, கடைசி ஓவரையும் ஷமி சிறப்பாக வீசினார். இதனால், அந்த ஓவரில் அம்பதி ராயுடு மற்றும் ஜாதவ் ஆட்டமிழந்தனர். மேலும், அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட போகவில்லை. அதனால், 5 ரன்கள் தான் கிடைத்தது.
இதன்மூலம், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.