டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்று, ஒலிம்பிக் போட்டியில் தனது 2-ஆவது பதக்கத்தைப் பெற்றுள்ளாா் சிந்து.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து, இந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹீ பிங் ஜியாவை 21-13, 21-15 என்ற செட்களில் வீழ்த்தினாா். ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்ற 2-ஆவது இந்திய போட்டியாளா் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளாா். முன்னதாக மல்யுத்த வீரா் சுஷீல் குமாா் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார்.
வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பி.வி. சிந்து கூறியதாவது:
அரையிறுதியில் தோற்றபிறகு வேதனையில் இருந்தேன். அழுதுகொண்டிருந்தேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது என என் பயிற்சியாளர் என்னைத் தேற்றினார். தோற்றதற்காக சோகமாக இருப்பதா இல்லை, இன்னொரு வாய்ப்புக்காகச் சந்தோஷப்படுவதாக எனத் தெரியாமல் இருந்தேன். ஆனால் பயிற்சியாளர் பார்க் சொன்னார், 3-வது இடத்துக்கும் 4-வது இடத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்றார். இது என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டுக்காக ஒரு பதக்கம் பெற வேண்டும் என எண்ணினேன். 100 சதவீதம் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்கிற மனநிலையில் விளையாடினேன்.
வெற்றி பெற்ற பிறகு எனக்கு எதுவும் புரியவில்லை. என் பயிற்சியாளர் கண்ணீரில் இருந்தார். ஐந்தாறு நொடிகளுக்குப் பிறகு உற்சாகமாகக் கத்தினேன். அவரை அணைத்துக்கொண்டு நன்றி சொன்னேன். இது அவருடைய முயற்சியாலும் கிடைத்ததுதான்.
பயிற்சியாளர் கோபிசந்த் என்னுடைய வெற்றிக்கு வாழ்த்தினார். அவர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். சாய்னா இல்லை. நாங்கள் அவ்வளவாகப் பேசிக்கொள்ளமாட்டோம். அதனால்... என்றார்.