இரவு விளக்குகளால் ஒளிரும் ஒலிம்பிக் நகரத்தின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலின் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டியானது ஒத்திவைக்கப்பட்டு நடப்பாண்டு ஜூலை 23ஆம் தேதி ஜப்பானில் உள்ள டோக்கியோவில் தொடங்கியது.ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டி உலகம் முழுவதும் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள டோக்கியோ நகரத்தின் புகைப்படம் இணையத்தைக் கலக்கி வருகிறது.
இரவு நேரத்தில் விளக்குகளால் ஒளிரும் டோக்கியோ நகரத்தின் இந்தப் புகைப்படத்தை நாசா நிறுவனம் புதன்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தைக் குறிப்பிட்டு கருத்துப் பதிவிட்டுள்ள விண்வெளி வீரர் கிம்பிரோ, “வணக்கம் டோக்கியோ. நேற்றைய இரவு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நாங்கள் பார்த்தோம். பல நாடுகள் தங்கத்திற்காகப் போராடினாலும் 250 மைல்களுக்கு அப்பால் இருக்கும் எங்களுக்கு நாம் அனைவரும் ஒரே அணியினர் தான்” எனப் பதிவிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்து வருகிறது.