ஐபிஎல் ஆட்டத்தைக் காணச் செல்பவர்கள் பாஜக ஆதரவாளர்கள் & தமிழ்நாட்டின் எதிரிகள்: ஜேம்ஸ் வசந்தன்

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தைக் காணச் செல்பவர்கள் பாஜக ஆதரவாளராகவும், தமிழ்நாட்டின் எதிரிகளாகவும் மட்டும்தான் இருக்கமுடியும் என்று...
ஐபிஎல் ஆட்டத்தைக் காணச் செல்பவர்கள் பாஜக ஆதரவாளர்கள் & தமிழ்நாட்டின் எதிரிகள்: ஜேம்ஸ் வசந்தன்
Published on
Updated on
2 min read

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தைக் காணச் செல்பவர்கள் பாஜக ஆதரவாளராகவும், தமிழ்நாட்டின் எதிரிகளாகவும் மட்டும்தான் இருக்கமுடியும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விமரிசனம் செய்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கு மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியை நடத்தக் கூடாது என தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையும் மீறி போட்டி நடத்தப்பட்டால், மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் விளைவாக சேப்பாக்கம் மைதானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும்போது மைதானத்துக்கு வெளியேயும், உள்ளேயும் 100 ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கூடுதல் ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 13 துணை ஆணையர்கள், 29 உதவி ஆணையர்கள் ஆகியோர் பாதுகாப்பைக் கண்காணிக்கின்றனர். மேலும் கமாண்டோ படையின் ஒரு அணியும் அதி தீவிரப் படையின் 4 குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் பேக், செல்லிடப்பேசி, ரேடியோ, டிஜிட்டல் டைரி, மடிக்கணினி, டேப் ரிகார்டர், பைனாகுலர், ரிமோட் கன்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய கார் சாவி, இசைக் கருவிகள், விடியோ கேமரா, பட்டாசு, தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், பீடி, பேட்டரி, கருப்புத் துணிகள், பதாகைகள், கொடிகள், உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் ஆகியவை கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு செல்ல முற்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். மைதானத்துக்குள் பொருள்களை வீசுபவர்கள், ரசிகர்களுக்குத் தொந்தரவு செய்பவர்கள், தவறான வகையில் பேசுபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள் பல தரப்பிலும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டால் பல்வேறு சிரமங்களுக்கு ரசிகர்கள் உள்ளாக நேரிடும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளதாவது:

தன்மானமுள்ள மனிதன் இந்தக் கட்டுப்பாடுகளைக் கேட்டப் பிறகாவது சிந்திக்க வேண்டும்

நாளை ஸ்டேடியத்தில் இவைகளுக்குத் தடை:
1. கருப்பு உடை
2. செல்போன்
3. கேமரா
4. இசைக்கருவி
5. அட்டை
6. பேனர்
7. கொடி
8. தண்ணீர் பாட்டில்
9. உணவு
10. சூடு/சுரணை

இதையும் தாண்டி நாளை உள்ளே செல்பவர்கள் பிஜேபி ஆதரவாளராகவும், தமிழ்நாட்டின் எதிரிகளாகவும் மட்டும்தான் இருக்கமுடியும் என்று விமரிசனம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com