11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் கடைசி லீக் ஆட்டம் 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் குவாலிஃபையர் வாய்ப்பை தக்க வைத்தது. மேலும் பங்கேற்ற அனைத்து ஜபிஎல் தொடர்களிலும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரசிகர்களால் சின்ன தல என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டித் தொடரில் 5 ஆயிரம் ரன்களை முதலில் கடந்த வீரர் என்ற அசத்தல் சாதனை படைக்க நடப்பு சீசனில் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 174 போட்டிகளில் 4,931 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளார். இதில் 441 பவுண்டரிகளும், 184 சிக்ஸர்களும் அடங்கும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 100* (ஒரு சதம்) மற்றும் 35 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
5 ஆயிரம் ரன்களைக் கடக்க இன்னும் 69 ரன்கள் மட்டுமே உள்ள நிலையில், நடப்பு சீசனில் மட்டும் 3 வாய்ப்புகள் உள்ளது. அதிரடி ஆட்டக்காரரான ரெய்னா, இந்த இலக்கத்தை ஒரே இன்னிங்ஸில் சாதித்துவிடுவார் என்றே அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விராட் கோலி, 4,948 ரன்கள் குவித்து ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தற்போது வரை முதலிடத்தில் நீடிக்கிறார். 163 போட்டிகளல் விளையாடியுள்ள கோலி, 4 சதங்கள், 34 அரைசதங்கள் உட்பட ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 113 ரன்கள் குவித்துள்ளார். இதில் மொத்தம் 434 பவுண்டரிகளும், 177 சிக்ஸர்களும் அடங்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேற்றப்பட்ட நிலையில், முதலிடத்தில் உள்ள விராட் கோலியை எளிதாக முந்திச் சென்று நடப்பு சீசனிலேயே இதை சாதிக்கும் அரிய வாய்ப்பு சுரேஷ் ரெய்னாவுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.