கடந்த 9 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த 48 வயது ஜான்டி ரோட்ஸ், சொந்தக் காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நியூஸிலாந்தின் ஜேம்ஸ் பம்மெண்ட் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் ஈடுபட்டு வரும் வியாபாரம் தொடர்பான பணிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ரோட்ஸ் கூறியுள்ளார். 2009 முதல் மும்பை ஐபிஎல் அணிக்காகப் பணியாற்றியுள்ள ரோட்ஸ் குறித்து அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: மும்பை அணியின் மிகப்பெரிய பலமாக ரோட்ஸ் விளங்கியுள்ளார். அவருடைய பங்களிப்புகளை வார்த்தைகளால் மதிப்பிடமுடியாது. அவர் முடிவை மதிக்கிறோம். அவருடைய எதிர்காலத்துக்கு எங்கள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
ஜேம்ஸ் பம்மெண்ட், ஃபீல்டிங் பயிற்சி தொடர்பான பணிகளை நியூஸிலாந்து அணிக்காகச் செய்துள்ளார். நார்தர்ன் டிஸ்டிரிக்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.