ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி எதிர்பாராதவிதமாக 403 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் 3-ஆவது டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 305 ரன் குவித்தது. 110 ரன்களுடன் மலானும், 75 ரன்களுடன் பேர்ஸ்டோவும் களத்தில் இருந்தார்கள்.
6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து இன்று தொடர்ந்தது. நல்ல நிலையில் உள்ளதால் குறைந்தபட்சம் 450 அல்லது 500 ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறப்பான பந்துவீச்சு மூலம் ஆரம்பம் முதல் ஆஸி. பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தார்கள். மலான் 140 ரன்களில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 368. அடுத்த 9 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து. பேர்ஸ்டோவ் 185 பந்துகளில் சதமெடுத்தார். ஆனால் அவரும் 119 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஹேஸிவுட், ஸ்டார்க் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் நிலைகுலைந்த இங்கிலாந்து எதிர்பாராதவிதமாக 115.1 ஓவர்களில் 403 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 6 விக்கெட்டுகளை 35 ரன்களுக்குள் இழந்தது இங்கிலாந்து ரசிகர்களை மிகவும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 25.1 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 28 ஓவர்கள் வீசிய ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளையும், 28 ஓவர்களை வீசிய பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
பிரிஸ்பேனில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 120 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.