2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள 11-ஆவது சீசசன் ஐபிஎல் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் தொடர்பான தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக புதுதில்லியில் டிசம்பர் 6-ந் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் பிசிசிஐ நடத்திய பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் இந்த ஏலம் தொடர்பான விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தை அனைத்து அணிகளும் ஜனவரி 4-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை ஏலம் எடுக்க இம்முறை ரூ.80 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் குறைந்தபட்சம் 75 சதவீதமாவது (ரூ.60 கோடி வரை) கட்டாயம் செலவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்துக்கு அதிகபட்ச தொகை ரூ.66 கோடி ஆகும்.
இந்நிலையில், 11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்குகான வீரர்கள் ஏலம் ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. அச்சமயம் இந்திய அணி தென் ஆப்பிரிக்க தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அதுபோல உள்ளூரில் சயீது முஸ்தாக் அலி டி20 தொடர் நடைபெறுகிறது.