கார்டிஃப்பில் இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் இலங்கையும், பாகிஸ்தானும் மோதுகின்றன.
இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே காலிறுதியைப் போன்றதாகும். ஏனெனில் இதில் வெல்லும் அணியே அரையிறுதிக்கு முன்னேறும்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றாலும், அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எளிதாக வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது.
அதேநேரத்தில் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றபோதிலும், இந்தியாவுக்கு எதிராக 322 ரன்கள் என்ற இலக்கை எட்டியதால் மிகுந்த நம்பிக்கையோடு பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது. இலங்கை அணிக்கு இளம் பேட்ஸ்மேன்கள் வலு சேர்க்கின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபியில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இலங்கை இரு வெற்றிகளையும், பாகிஸ்தான் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன.