பயிற்சியாளர் கும்ப்ளேவை மாற்ற பிசிசிஐ முயல்வது ஏன்?

பல முக்கியமான வெற்றிகளை வழங்கிய கும்ப்ளேவுக்கு பணி நீட்டிப்பு வழங்கியிருக்கவேண்டிய பிசிசிஐ...
பயிற்சியாளர் கும்ப்ளேவை மாற்ற பிசிசிஐ முயல்வது ஏன்?

இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐயின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியோடு இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (45) கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவர் ஓராண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கான போட்டியில் இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, ஸ்டுவர்ட் லா ஆகியோரை கும்ப்ளே வெற்றி கண்டார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, லால்சந்த் ராஜ்புத், பிரவீண் ஆம்ரே, அனில் கும்ப்ளே, டாம் மூடி, ஸ்டுவர்ட் லா, ஆண்டி மோல்ஸ் உள்பட மொத்தம் 57 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேர் மட்டுமே கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

 சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மண், செளரவ் கங்குலி ஆகியோர் அடங்கிய அந்தக் குழு, 10 பேரை தேர்ந்தெடுத்து கொல்கத்தாவில் நேர்காணல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டார். ஜூலை மாதம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து அனில் கும்ப்ளே தனது பணியைத் தொடங்கினார்.

இந்நிலையில் கும்ப்ளேவின் பதவிக்காலம் அடுத்து நடைபெறுகிற சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் முடிவடைவதால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்குப் புதிய நபரைத் தேர்ந்தெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். புதிய பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 31 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே நேரடியாகப் போட்டியில் கலந்துகொண்டுள்ளார். இதற்கான தேர்வை கிரிக்கெட் ஆலோசனைக் குழு நடத்தும். சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு பயிற்சியாளர் தேர்வுக்கானப் பணிகளைச் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐயின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கும்ப்ளே பயிற்சியாளர் ஆனவுடன் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை வென்றது. அங்கு இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரில் 2 டெஸ்டுகளில் வென்றது. இதன்பிறகு இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்றது. 17 டெஸ்டுகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்தது. அதேபோல நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களிலும் வெற்றி கண்டது இந்தியா.  அமெரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரில் மட்டுமே இந்தியா தோற்றுப்போனது.

இந்த நிலையில் பல முக்கியமான வெற்றிகளை வழங்கிய கும்ப்ளேவுக்கு பணி நீட்டிப்பு வழங்கியிருக்கவேண்டிய பிசிசிஐ, தற்போது அவரை பயிற்சியாளருக்கான தேர்வில் கலந்துகொள்ள வைத்துள்ளது. பிசிசிஐயின் இந்த முடிவு ஏற்கக்கூடியதாக இல்லை என்றே பலரும் கருதுகிறார்கள். சமீபகாலமாக வீரர்களின் ஊதிய உயர்வு குறித்து கும்ப்ளே மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றொரு கருத்தும் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com