

தோனி தனக்கான கிரிக்கெட் வாழ்க்கையில் பாதியைக் கூட தாண்டவில்லை. எனவே, அவர் அணியில் நீடிப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக சில பரிசோதனை முயற்சிகள் மற்றும் சுழற்சி முறைகளில் இந்திய அணி ஈடுபடவுள்ளது. ஆனால், அதில் தோனிக்கான இடத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
இந்திய அணியில் தோனி தவிர்க்க முடியாத ஒரு நபர். அவர் தனது கிரிக்கெட் பாதையில் பாதியளவைக் கூட தாண்டவில்லை. அவரது காலம் நிறைவடைந்துவிட்டதாக எவரேனும் கருதினால், அது அவர்களின் தவறாகும்.
தோனியின் பேட்டிங் புள்ளி விவரங்களை தவிர்த்துவிடுங்கள். இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பராக அவர் விளங்குகிறார். வேறென்ன வேண்டும்? நீண்ட காலம் விளையாடும் காரணத்தால் அவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. சுனில் கவாஸ்கரும், சச்சின் டெண்டுல்கரும் 36 வயது வரையில் விளையாடும்போது மாற்ற நினைத்தோமா? தோனி மிகச் சிறந்த வீரர் ஆவார் என்று ரவி சாஸ்திரி கூறினார்.
இந்நிலையில், புஜாரா, அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் விரைவில் அணியில் இணைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.