தென் கொரிய தலைநகர் சியோலில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சிந்து 21-10, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹி பிங்ஜியாவை தோற்கடித்தார்.
மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நஜோமி 21-17, 21-18 என்ற நேர் செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையும், சகநாட்டவருமான அகானே யமாகுசியைத் தோற்கடித்தார்.
இந்நிலையில், கொரிய ஓபன் பாட்மிண்டன் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார் இந்தியாவின் பி.வி.சிந்து.
கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் நஜோமியிடம் தோற்று தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் சிந்து. அந்தத் தோல்விக்கு இந்த முறை சிந்து பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இருவரும் சமபலத்துடன் ஆக்ரோஷமாக மோதினர். இறுதியாக இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
அதுமட்டுமல்லாமல் கொரிய ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்தார்.