'சிக்ஸர்' எனக்கு புதிதல்ல

சிக்ஸர்களை விளாசும் திறனை ஒரே இரவில் வளர்த்துக் கொள்ளவில்லை.
'சிக்ஸர்' எனக்கு புதிதல்ல
Published on
Updated on
1 min read

சிக்ஸர்களை விளாசும் திறனை ஒரே இரவில் வளர்த்துக் கொள்ளவில்லை. இளம் வயது முதலே சிக்ஸர் விளாசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பிரமாண்ட சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் பாண்டியா. அவரை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறி வருகிறார்கள். 
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் 72 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார் பாண்டியா. 
அதன்பிறகு பாண்டியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 43 பந்துகளில் 76 ரன்கள் குவித்ததுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பாண்டியா கூறியதாவது:
நீங்கள் அப்படி நினைத்தால், நினைத்துக் கொள்ளுங்கள். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நான் அதற்கு முன்னரே, ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ரன் குவித்துள்ளேன். கடந்த ஐபிஎல் போட்டி எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. எனினும் கடுமையாக உழைத்ததன் மூலம் மீண்டும் 
ஃபார்முக்கு திரும்பியிருக்கிறேன். இதற்கு முன்னரும் அதிக அளவில் சிக்ஸர்களை அடித்திருக்கிறேன். ஆனால் இப்போது பிரமாண்ட சிக்ஸர்களை விளாசி வருகிறேன். இளம் வயது முதலே சிக்ஸர் அடிப்பதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன். 
எந்த மாதிரியான ஷாட்டை ஆடப் போகிறோம் என்பதை தீர்மானிப்பதற்கு முன்பாக போட்டியின் சூழலை நன்றாக அறிந்துகொள்வது முக்கியமாகும். சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆடம் ஸம்பா பந்துவீச்சில் சிக்ஸரை விளாச முடியும் என நினைத்தேன். அதனால்தான் 7 ஓவர்கள் நிதானம் காட்டினேன். எனக்கான நேரம் வந்தபோது அதிரடியாக ஆடி ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டேன் என்றார்.
3-ஆவது ஆட்டத்தில் வழக்கத்துக்கு மாறாக முன்வரிசையில் (4-ஆவது இடத்தில்) களமிறங்கியது குறித்துப் பேசிய பாண்டியா, 'என்னை எந்த இடத்தில் களமிறக்கினாலும், அதை நான் சவாலாக நினைக்கமாட்டேன். மாறாக அதை எனக்கு கிடைத்த வாய்ப்பாகவே எடுத்துக் கொள்வேன். 4-ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டபோது, நான் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் இந்த ஆட்டத்தில்தான் நான் அதிக பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது சிறப்பானதாகும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com