இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள் என்கிற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 ஆகிய போட்டிகளில் விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது இந்தியா. 2-ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை தொடங்குகிறது.
இந்திய கேப்டன் கோலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தன்னுடைய இடம் பாதுகாப்பாக உள்ளதாக கே.எல். ராகுல் உணரவேண்டும். வெளியே நடக்கும் விஷயங்களால் அது மாறக்கூடாது. அணிக்குத் தேவைப்படும்போது ராகுல் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவரைப் போன்றவருக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும். நன்றாக விளையாடி வந்தாலும் காயங்களால் வெளியேற வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.
கடந்த டெஸ்டில் விளையாடிய தொடக்க வீரர்களில் ஒருவர் ராகுலுக்காகத் தன் இடத்தை விட்டுக்கொடுக்கவேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக நிறைய சாதித்துள்ளார் ராகுல். எனவே அவருடைய இடம் மீண்டும் அவருக்கு வழங்கப்படவேண்டும். எனவே நாளைய டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடுவார். அணியின் கூட்டம் முடிந்தபிறகு இதுகுறித்து தெளிவான முடிவை அறிவிக்கமுடியும்.
அதேசமயம் இன்னொரு தொடக்க வீரர் யார் என்றால், கடந்த டெஸ்ட் போட்டியில் திறமையை வெளிப்படுத்தி அணிக்கு உதவிய வீரருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். யாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையோ அவர் நிச்சயம் நிலைமையைப் புரிந்துகொள்வார். தொழில்முறையில் விளையாடும் வீரர்கள் அணியின் நலனுக்காக இந்தச் சூழலை நிச்சயம் புரிந்துகொள்வார்கள் என்றார்.