இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.
மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதை அடுத்து சமநிலையில் உள்ளது. எனவே, கடைசி ஆட்டத்தில் வென்று எந்த அணி தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியுள்ளது.
தில்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, டி20-இல் கடந்த 6 ஆட்டங்களில் நியூஸிலாந்துக்கு எதிராக முதல் முறையாக வாகை சூடியிருந்தது. எனினும், அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாத வகையில் 2-ஆவது ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மீண்ட நியூஸிலாந்து, தொடரையும் சமன் செய்தது.
இதனால், சொந்த மண்ணில் சமீபத்தில் எந்தத் தொடரையும் இழக்காமல் வெற்றி நடை போட்டுவரும் இந்திய அணிக்கு, தொடரை கைப்பற்றியாக வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.
மிரட்டும் மழை
3-வது டி20 ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை கனமழை பெய்தது. இதையடுத்து, ஆடுகளம் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டிருந்தன. ஆட்டம் நடைபெறவுள்ள இன்று அங்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை வழிவிடும் பட்சத்தில், ஆட்டம் நடைபெறும்.
மழை இல்லாவிட்டால் ஆட்டம் தொடங்குவதில் பிரச்னை இல்லை. அந்தளவுக்கு வடிகால் வசதிகள் சிறப்பாக உள்ளதாக மைதான அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். திருவனந்தபுரத்தில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.