ஜார்ஜியாவில் நடைபெறவுள்ள ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்கிறார்.
5 முறை உலக சாம்பியனான ஆனந்த், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் பங்கேற்பதன் மூலம், 2018-ஆம் ஆண்டு கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளார். இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆனந்த் தலைமையில் 7 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
முன்னதாக, சீனா (2000) மற்றும் ஹைதராபாதில் (2002) நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் ஆனந்த் பங்கேற்றிருந்தார். எனினும், 2007-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு அவர் அதில் விளையாடவில்லை.
இந்த உலகக் கோப்பையில் ஆனந்த், தனது முதல் சுற்றில் மலேசியாவின் யோ லி டியானை எதிர்கொள்கிறார். அதில் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் வருஸான் அகோபியானை 2-ஆவது சுற்றிலும், இங்கிலாந்தின் மைக்கேல் ஆடம்ûஸ 3-ஆவது சுற்றிலும், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவை அதற்கு அடுத்த சுற்றிலும் சந்திப்பார்.
இப்போட்டியில் ஆனந்த் தவிர, கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜராத்தி, பாஸ்கரன் அதிபன், தீப் சென்குப்தா, சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோர் பங்கேற்கின்றனர்.