கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.
பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் ஹாக்கியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இரண்டாவது ஆட்டத்தில் வலு குறைந்த வேல்ஸ் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை இந்தியா தோற்கடித்தது.
இந்நிலையில் இந்திய அணி இன்று இங்கிலாந்தை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து தனது பி பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.