இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ்டன். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி பல ஏற்றங்களைக் கண்டது. குறிப்பாக உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் தரவரிசையில் முதலிடம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து சிறந்த 6 இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து பயிற்சியளிக்க உள்ளதாக கேரி கிறிஸ்டன் அறிவித்துள்ளார். இந்த தேர்வானது ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் மே 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தேர்வாகும் முதல் 3 வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை அளிக்கிறார்.
மொத்தம் 8 நகரங்களில் இருந்து 6 வீரர்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இவர்களுக்கு முதல்கட்டமாக புணேவில் ஒருவாரம் பயிற்சியளிக்கப்படுகிறது. பின்னர் அதில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் வீரர்கள் ரூ.2 லட்சம் உதவித்தொகையுடன் 2 மாதம் உணவு மற்றும் இருப்பிடம் அளித்து 2 மாத காலம் அவரது கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி வழங்கப்படும்.
இதில் கலந்துகொள்ள ஆயிரம் ரூபாய் (வரிகள் உட்பட) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9112295566 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பெயர், வசிப்பிடம் மற்றும் தொடர்பு விவரங்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.