உலகின் தலைசிறந்த 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் உலக பாட்மிண்டன் சம்மேளன வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் போட்டி ஆண்டு இறுதியில் நடத்தப்படுகிறது. சீனாவின் குவாங்ஷுவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் துவக்க ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார். ஜப்பானின் அகேன் யெமகுச்சியை 24-22, 21-15 என்ற நேர் செட்களில் வென்றார்.
இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் உலகின் நெ.1 வீராங்கனையான சீன தைபேவைச் சேர்ந்த தாய் ஹு யிங்கை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 14-21, 21-16, 21-18 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அடைந்துள்ளார் சிந்து. தாய் ஹு யிங்கிடம் கடந்த ஆறு ஆட்டங்களில் தோற்ற சிந்து, இந்த வெற்றியின் மூலம் புதிய அத்தியாத்தைத் தொடங்கியுள்ளார். வெள்ளியன்று அமெரிக்க வீராங்கனை பெய்வென்னை எதிர்கொள்கிறார் சிந்து.