ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் நாளன்று இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
புதிய தொடக்க வீரர்களான விஹாரியும் மயங்க் அகர்வாலும் ஆஸி. பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டார்கள். பந்துவீச்சுக்குச் சாதகமில்லாத ஆடுகளத்தை நன்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்தார்கள். வழக்கமாக இந்திய தொடக்க வீரர்களில் யாராவது ஒருவர் உடனடியாக ஆட்டமிழந்து விடுவார். இதைத்தான் பல வருடங்களாக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பார்த்து வருகிறோம். ஆனால் இந்த ஜோடி நிதானமாக விளையாடி புதிய அனுபவத்தை இந்திய ரசிகர்களுக்கு அளித்தார்கள். தான் சந்தித்த 25-வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்தார் விஹாரி. கடைசியில் 66 பந்துகள் வரை எதிர்கொண்டு 6 ரன்கள் மட்டும் சேர்த்த விஹாரி, கம்மின்ஸின் பவுன்சரில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த புஜரா வழக்கம்போல தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல்நாள் உணவு இடைவேளையின்போது 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது இந்தியா.
ஆஸி. பந்துவீச்சாளர்களில் கம்மின்ஸ் கூடுதல் விவேகத்துடன் பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார். இதனால் அவருடைய பந்தை அடிக்க இருவருமே யோசித்தார்கள். 95 பந்துகளில் தனது முதல் டெஸ்டில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் மயங்க் அகர்வால். 44.3 ஓவர்களில் 100 ரன்களைப் பத்திரமாக எட்டியது இந்தியா. லயனின் 13-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அசத்தினார் மயங்க். ஆனால் தேநீர் இடைவேளை நெருங்கும் சமயத்தில் கம்மின்ஸ் பந்துவீச்சில் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள். தேநீர் இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது இந்தியா.
தேநீர் இடைவேளைக்குப் பிறகும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் புஜாரா. 152 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆனால் கோலி ஆரம்பத்திலிருந்தே விரைவாக ரன்கள் எடுத்தார். இதனால் ஒரு ஓவருக்கு 4 ரன்கள் என்கிற வகையில் ஒருகட்டத்தில் ரன்கள் சேர்ந்தது. அதன்பிறகு மேலும் விக்கெட்டுகள் விழக்கூடாது என்பதற்காக இருவரும் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தார்கள். இதனால் 83-வது ஓவரில்தான் இந்திய அணியால் 200 ரன்களை எட்டமுடிந்தது. முதல் நாளின் கடைசிக்கட்டத்தில் ஸ்டார்க் சிறப்பாகப் பந்துவீசி அச்சுறுத்தலாக விளங்கினார். எனினும் அவரால் விக்கெட் எதுவும் எடுக்கமுடியாமல் போனது.
முதல் நாளில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 68, கோலி 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.