மெல்போர்னில் இன்று தொடங்கிய 3-வது டெஸ்டின் முதல் நாளில் புதிய சாதனை நிகழக் காரணமாக இருந்துள்ளார்கள் இந்திய - ஆஸ்திரேலிய ரசிகர்கள்.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
வழக்கமாக மெல்போர்னில் உள்ள எம்சிஜி மைதானத்தில் நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்டுகளுக்கு ரசிகர்கள் திரண்டு வந்து ஆதரவளிப்பார்கள். கடந்த வருடம் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று 88,172 பேர் வருகை தந்தார்கள். மெல்போர்ன் மைதானத்தில் 4-வது அதிக வருகை என அந்த டெஸ்ட் சாதனை படைத்தது.
அதேபோல இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்குபெறும் இந்த பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் நாளன்று 73, 516 ரசிகர்கள் வருகை தந்துள்ளார்கள். இதுவும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் அதிக வருகை இதுதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருவதால் அதிக இந்திய ரசிகர்கள் வருகை தந்துள்ளார்கள்.