வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதையடுத்து டாக்காவில் 2-ஆவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. குஷல் மெண்டிஸ் 68, ரோஷன் சில்வா 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச தரப்பில் அப்துர் ரசாக் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் 110 ரன்களுக்குச் சுருண்டது. மெஹதி ஹாசன் 38* ரன்கள் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். இலங்கை தரப்பில் அகில தனஞ்செயா, சுரங்க லக்மல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரோஷன் சில்வா 70* எடுத்தார். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
339 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி தனது 2-ஆவது இன்னிங்ஸிலும் 123 ரன்களுக்குச் சுருண்டு 2015 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இலங்கையின் அகில தனஞ்செயா 5 விக்கெட்டுகளையும், ரங்கன ஹெராத் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரங்கன ஹெராத், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 415 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் பாகிஸ்தானின் வாசிம் அக்ரமை முந்தினார்.
இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.