சர்ஃப்ராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை வென்றது. இதையடுத்து நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-5 என வயிட்-வாஷ் தோல்வியைத் தழுவியது. இதுகுறித்து அந்த அணியின் முன்னாள் வீரர்கள் விமரிசித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக்குழுத் தலைவருமான இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்ததாவது:
ஒரு அணி இதுபோன்ற மோசமான தோல்வியை அடைகிறது என்றால் அதில் நிச்சயம் மாற்றம் தேவை. இனி வரும் காலங்களில் இதுபோன்ற மோசமான தோல்விகளை தவிர்க்க அதிக அளவிலான ஒருநாள் உள்ளூர் போட்டிகளை நடத்திட வேண்டும். பாகிஸ்தானில் தற்போது ஒரேயொரு ஒருநாள் தொடர்தான் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலை மாறவேண்டும்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை போட்டிகளிலும் வேறு மாதிரியான அணுகுமுறை தேவை. இது அனைத்திலும் சிறப்பாக செயல்படும் வகையில் வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
இறுதியாக களமிறங்கும் வீரர்களை தேர்வு செய்வது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தான். இருந்தாலும் நான் எனது யோசனகளையும் தெரிவிப்பேன். இருந்தாலும் அந்த நேரம் ஆடுகளத்தின் தன்மை தான் ஆடும் லெவனை தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார்.