ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணிக்காக இதுவரை விளையாடிய அஸ்வின் இந்த வருடம் பஞ்சாப் அணிக்குத் தேர்வாகியுள்ளார். அவரை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.
சமீபத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அஸ்வினை கேப்டனாக நியமித்துள்ளது பஞ்சாப் அணி.
கிறிஸ் கெயில், ஃபிஞ்ச், யுவ்ராஜ் சிங், டேவிட் மில்லர், ஆண்ட்ரூ டை, மயங்க் அகர்வால், கருண் நாயர், கேஎல் ராகுல், அக்ஷர் படேல் போன்ற வீரர்கள் பஞ்சாப் அணியில் உள்ளார்கள்.
இந்நிலையில் ஒரு கேப்டனாக குறைந்த அனுபவங்களே கொண்டிருக்கிறார் அஸ்வின்.
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கேப்டனாக இருந்த அஸ்வின், அதில் தோல்வியையே சந்தித்துள்ளார்.
லிஸ்ட் ஏ எனப்படும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் 15 ஆட்டங்களில் கேப்டனாக இருந்த அஸ்வின் 12 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளார்.
ஆனால் இதுவரை டி20 ஆட்டங்களில் கேப்டனாக அவர் இருந்தது கிடையாது. எனவே பஞ்சாப் அணியின் முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.
பஞ்சாப் அணியின் இந்த முடிவு குறித்து அஸ்வின் கூறியதாவது:
இந்தப் பதவியை ஏற்பது சுலபமான முடிவாக இல்லை. ஆனால் சேவாக் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையால் இந்த முடிவை ஏற்றுக்கொண்டேன். பிரபல வீரர்களுடன் இணைந்து விளையாடுவதில் ஆர்வமாக உள்ளேன். ஒன்று மட்டும் நிச்சயம், நான் என் திட்டங்களைச் சுலபமாக யூகிக்கும் ஒரு கேப்டனாக நிச்சயம் இருக்க மாட்டேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.