ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் அசாருதீன், ஐசிசி-யை கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அசாருதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆப்கானிஸ்தான் ஒரு சிறந்த அணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஒருநாள் போட்டிக்கும் டெஸ்ட் போட்டிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கி சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) தேவையற்ற செயலைச் செய்துள்ளது.
அந்த அணிக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் அளித்திருக்கலாம். இந்தப் போட்டியானது அவர்களுக்கு சிறந்த பாடமாக அமைந்துவிட்டது. இதிலிருந்து அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி நிறைய அனுபவத்தைப் பெற முடியும் என்றார்.
முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவை பெங்களூருவில் எதிர்கொண்டது. இதில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.