18 வயது பிருத்வி ஷா சதம்: முதல் நாளில் இந்தியா 364/4

தனது முதல் டெஸ்ட் போட்டியில் 18 வயது பிருத்வி ஷா,  99 பந்துகளில் சதமடித்து சாதனை செய்துள்ளார்.
18 வயது பிருத்வி ஷா சதம்: முதல் நாளில் இந்தியா 364/4

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகத் தனது முதல் டெஸ்ட் போட்டியில் 18 வயது பிருத்வி ஷா,  99 பந்துகளில் சதமடித்து சாதனை செய்துள்ளார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆரம்பம் முதல் 18 வயது பிருத்வி ஷா அற்புதமாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம் தனது முதல் டெஸ்டில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 18 வருடம் 329 நாளில் இச்சாதனையைச் செய்துள்ளார். இதற்கு முன்பு 20 வருடம் 126 நாள்களில் அப்பாஸ் அலி பைக், இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதமடித்ததே சாதனையாக இருந்தது. 

உணவு இடைவேளையின்போது இந்திய அணி 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. ஷா 75, புஜாரா 56 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இதன்பிறகும் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார் பிருத்வி ஷா. இதனால் பவுண்டரிகள் தொடர்ந்து கிடைத்தன. எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 பந்துகளில் சதமெடுத்த தவனின் சாதனையை பிருத்வி ஷாவால் தகர்க்க முடியவில்லை. 99 பந்துகளில் சதமடித்து, முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். மேலும் இளம் வயதில் சதமடித்த வீரர்களின் பட்டியலில் பிருத்வி ஷா 7-ம் இடம் பிடித்துள்ளார்.

பிருத்வி ஷாவுக்கு இணையாக வேகமாக ரன்கள் குவித்தார் புஜாரா. இன்று அவருடைய ஸ்டிரைக் ரேட் பெரும்பாலும் 70களில் இருந்தது. ஷா- புஜாரா கூட்டணி 245 பந்துகளில் 200 ரன்கள் எடுத்தது. ஷா போல சதமடிப்பார் என்று எண்ணப்பட்ட புஜாரா, 130 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து லூயிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சதமடித்த பிறகு சற்று நிதானமாக ஆடிவந்த பிருத்வி ஷா, 154 பந்துகளில் 134 ரன்களுடன்  ஆட்டமிழந்து வெளியேறினார். 

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி, 51 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 

முதல் இரு பகுதிகளின்போது பிருத்வி ஷா, புஜாரா ஆட்டங்களை ரசித்த ரசிகர்களுக்கு அதன்பிறகு கோலியின் ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. 

இங்கிலாந்தில் வெளிப்படுத்திய அதே சிறப்பான பேட்டிங்கை இன்றும் வெளிப்படுத்தினார் கோலி. இவரும் ரஹானேவும் நிதானமாக ரன்கள் சேர்த்தார்கள். கோலி 100 பந்துகளில் அரை சதமெடுத்தார். கோலி - ரஹானே ஆகிய இருவரும் 185 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். அரை சதமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே, 41 ரன்களில் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  இதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 17 ரன்கள் சேர்த்தார். இந்தியாவில் விளையாடிய டெஸ்டுகளில், கடைசி நான்கு இன்னிங்ஸில் கோலி எடுத்த ரன்கள் - 104*, 213, 243, 50, 72*(பேட்டிங்). இதனால் நாளை நிச்சயம் சதமெடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

முதல்நாள் முடிவில் இந்திய அணி 89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. கோலி 72, பந்த் 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி குறைந்தபட்சம் 500 ரன்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com